கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 925 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து 325 மெகாவாட் மின்சாரமும் இந்தாண்டு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருகி வருவதால், மின்தேவை கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் நிலையங்களின் உற்பத்தியைத் திறம்பட நிர்வகித்தும், பிற மாநிலங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தும் மின் விநியோகத்தைச் சீரமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துள்ளது.
இந்த முயற்சிகளின் பலனாக, கடந்த மாதம் முதல் மின் விநியோகம் கணிசமான அளவிற்குச் சீரடைந்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனை மேலும் பெருக்கிட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
வடசென்னையில் 1200 மெகாவாட் மற்றும் மேட்டூரில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இவை தவிர, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்காக 925 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் மூலமாகக் கூடுதலாக 325 மெகாவாட் மின்சாரமும் இந்த ஆண்டு கிடைக்கும். மேற்கூறிய திட்டங்களின் மூலமாக வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை முழுவதுமாக நிறைவடையும் என்று ஆளுநர் தமது உரையில் கூறியுள்ளார்.