Publish Date: Wed, 21 Jan 2009 (11:47 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (11:47 IST)
தமிழகம் முழுவதும் தடையை மீறிய 'கள்' இறக்கும் போராட்டம் நடத்திய 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் 'கள்' விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஐக்கிய விவசாய சங்கம், தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் தடையை மீறி 'கள்' இறக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை மெமோரியல் அரங்கம் அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு ஐக்கிய விவசாய சங்க தலைவர் வையாபுரி, தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய விவசாயிகள் சங்க தலைவர் குருசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் என்.எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு கள் இறக்குவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழியில் தடையை மீறி 'கள்' விற்பனை செய்த 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி 'கள்' விற்பனை செய்த மாவட்ட நாடார் பேரவைத் தலைவர் சி.சண்முகதுரை, செயலர் என்.சிவா, மாநில உறுப்பினர்கள் எஸ்.ஜெ.மணிநாடார், எஸ்.வி.சத்திசீலன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் 700-க்கு மேற்பட்ட இடங்களில் தடையை மீறி 'கள்' விற்பனை செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.