இலங்கை பிரச்சனையில் திருமாவளவன் உண்ணாவிரதம் இருப்பது கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்து நடத்தும் ஒரு நாடகம் என்று குற்றம்சாற்றிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, போர் நிறுத்தம் வேண்டும் என்று தமிழகத்தில் நடப்பது எல்லாமே நாடகம்தான் என்றார்.
எம்.ஜி.ஆரின் 93வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரச்சனையில் எங்களுக்கு என்று தனிக் கொள்கை உள்ளது. சில கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டாலும் எல்லா கொள்கைகளிலும் அவை ஒத்து இருக்க வேண்டும் என்பது இல்லை என்றார்.
இப்போது திருமாவளவன் உண்ணாவிரதம் இருப்பது கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்து நடத்தும் ஒரு நாடகம் என்று குற்றம்சாற்றிய அவர், போர் நிறுத்தம் வேண்டும் என்று இங்கு நடப்பது எல்லாமே நாடகம்தான் என்றார்.
இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும். அவர்களுக்கு கவுரவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். சிங்களர்களுக்கு சமமாக சுதந்திரமான வாழ்க்கை நடத்த வேண்டும். இதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் பயங்கர வாதத்தை எதிர்க்கிறோம். விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள்தான் ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று கூறிய ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல என்று தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பாக செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் பிடித்து வைத்து கொண்டு ராணுவம் முன்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்த அவர், தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதி கொடுத்தால், இவ்வளவு உயிர்ப்பலி ஏற்படாது என்றார்.