இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் மத்திய அரசு இருக்கிறது என்றும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு தலையிட்டு வழி காண வேண்டும் என்றும் பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். தேசிய செயலர் திருநாவுக்கரசர், தமிழக பொது செயலர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை பிரச்சனை அல்ல; இந்திய பிரச்சனை
ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் பேசுகையில், "மத்திய அரசு இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் இருக்கிறது. அங்கே வாழும் இந்துக்கள் கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இது இலங்கை பிரச்சனை அல்ல. இந்திய பிரச்சனை. இதை நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலங்கை பிரச்சனையில் தீர்வு காண வேண்டும்'' என்றார்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்கள் படும் துன்பம் சொல்லிமாளவில்லை. இது பற்றி மத்திய அரசிடம் எவ்வளவு சொல்லியும் நடவடிக்கையில்லை. பிரதமர் வாக்கு கொடுத்த பிறகும் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை. அவர் செல்வாரா என்பதும் தெரியவில்லை.
கிளிநொச்சியில் இருந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் வெளியேறி உள்ளனர். அவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணைபோகிறது. இந்த நிலை மாற வேண்டும். மத்திய அரசு தலையிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
போரை நிறுத்தினால் அமைதி; சுடுகாட்டுக்கு போகும்படி செய்தால் அமைதி
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பேசுகையில், "அமைதி வழிக்கு 2 வழிகளில் தீர்வு காண முடியும். ஒன்று போரை நிறுத்தினால் அமைதி கிடைக்கும். மற்றொன்று சுடுகாட்டுக்கு போகும் படி செய்தால் அமைதி கிடைக்கும். இதில் எந்த வழியில் மத்திய அரசு எங்களுக்கு உதவ போகிறது என்று தெரியவில்லை. இது இந்திய நாட்டின் 100 கோடி மக்களின் பிரச்சனையாக கருதி விரைவில் ஒரு நல்ல முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும்'' என்றார்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் பேசுகையில்,"பா.ஜ.க ஆட்சி காலத்தில் இலங்கையில் எந்த தமிழரும் கொல்லப்படவில்லை. இலங்கை நாட்டில் இந்தியா நாட்டு கப்பல் படைகள் சுற்றி வரவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையை இந்திய நாட்டு கப்பல் படை காவல் காத்து கொண்டு இருக்கிறது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும்'' என்றார்.