Publish Date: Wed, 07 Jan 2009 (17:53 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (17:52 IST)
தமிழீழ ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் கூட்டணி வரம்புகளை மீறி ஈழத் தமிழர்களின் மீதான சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்து நிறுத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற வகையில் ஜனவரி 10ஆம் தேதி சென்னையில் தமிழீழ ஆதரவு கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த 4 மாதங்களாக தமிழகத்தின் அனைத்துக்கட்சியினரும், அனைத்து தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்து தமிழீழத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அதனையொட்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஈழத்தில் போரை நிறுத்த இந்திய அரசு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பிரதமரும், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவிற்கு அனுப்பி உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து விட்டு போரை நிறுத்த இந்திய அரசு எந்த முனைப்பும் காட்டாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் கிளர்ந்துள்ள வெகுமக்களின் உணர்வுகளை குவிமய்யப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன் மேலும் சில தலைவர்களை சந்தித்திட முயன்று வருகிறோம்.
அத்துடன் அதன் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வருகிற 9ஆம் தேதி சென்னையில் கூடி ஈழத் தமிழர்கள் சிக்கலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கலந்தாய்வு செய்கிறது.
தமிழீழ ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் கூட்டணி வரம்புகளை மீறி ஈழத் தமிழர்களின் மீதான சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்து நிறுத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற வகையில் வரும் 10ஆம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் நிற்கிறது, அனைவரும் ஒருங்கிணைவது தவிர்க்க முடியாதது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் தோழமையோடு சுட்டி காட்டுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.