ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது. ரத்தின அங்கி அணிந்த பாண்டியன் கொண்டை சிறப்பு அலங்காரத்துடன் ஜொலித்த நம்பெருமாள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டார்.
சரியாக அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் என்றழைக்கப்படும் பரமபதவாசல் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார். உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் விண் அதிர ரங்கா... ரங்கா... என்று பக்தி கோஷமிட்டனர்.
இன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றாலும் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் கோவில் முதன்மை பெற்று விளங்குவதால் இன்று ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திரண்டு இருந்தனர். இதனால் ஸ்ரீரங்கத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாக காட்சியளித்தது.
சொர்க்கவாசல் வழியாக வந்த நம்பெருமாள் 5.15 மணிக்கு திருக்கொட்டகை பிரவேசம் செய்தார். நம்பெருமாள் சொர்க்க வாசல் வழியாக பிரவேசம் செய்த பிறகு பக்தர்களுக்கும் சொர்க்க வாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்து இருக்கும். மற்ற நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்து இருக்கும். நேற்று நள்ளிரவு முதல் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசல் வழியாக வந்து நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.
வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராப்பத்து என்று 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ராப்பத்தின் முதல் நாள் விழா சொர்க்கவாசல் திறப்புடன் இன்று தொடங்கி உள்ளது. 17ஆம் தேதி வரை ராப்பத்து விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கைத்தல சேவை 13ஆம் தேதியும், வேடுபறி 14ஆம் தேதியும், ஆழ்வார் மோட்சம் 17ஆம் தேதியும் நடக்கிறது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக அமைச்சர் நரேந்திரசுவாமி, ஆந்திரா அமைச்சர் ரத்னாகர் ராவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.