Publish Date: Tue, 06 Jan 2009 (17:40 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (17:39 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது.
தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.
எனவே இனியாவது இலங்கைத் தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெளிவுடன் புரிந்து செயல்பட வேண்டும் என்று கி.வீரமணி கேட்டுக்கொண்டார்.