Publish Date: Tue, 06 Jan 2009 (10:19 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (10:19 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி 900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி 3,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அதன் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த பேருந்துகள் அனைத்தும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கடலூர், புதுச்சேரி, செஞ்சி போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும்.
அதேபோல் கும்பகோணம், மதுரை, கோவை, சேலம் ஆகிய போக்குவரத்துக் கழகம் சார்பிலும் தமிழகம் முழுவதும் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கலுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் வரும் 11ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பிலும், கடற்கரை, வண்டலூர் பூங்கா, பொருட்காட்சி, கிண்டி பூங்கா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.