Publish Date: Fri, 02 Jan 2009 (11:16 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (11:15 IST)
அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சிறப்பு திட்டத்தில் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், வல்லுநர்கள், உதவியாளர்கள், செவிலியர்கள் ஆகியோரை அயல்நாடுகளில் பணியமர்த்தும் பணியை, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் செய்து வருகிறது.
சென்னையில் உள்ள இந்நிறுவனத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பல்வேறு காரணங்களால் தங்கள் பதிவை புதுப்பிக்க முடியாதவர்கள், ஜனவரி 1 (நேற்று) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை சிறப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கொள்ளலாம்.
புதுப்பிக்க விரும்புபவர்கள் பதிவு எண், தகுதிக்கான சான்றுகளில் நகல்கள் 2 பிரதிகள், புதுப்பித்தல் கட்டணமாக இந்நிறுவனத்தின் பெயரில் எடுக்கப்பட்ட ரூ.112க்கான வரைவோலை ஆகியவற்றை எடுத்து, ''அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்ன- 600 020’’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்கள் அறிய 044-24464268 அல்லது 044-24464269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.