வாடகையை உயர்த்தி தரக்கோரி 3,500 டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மங்களூர், சென்னை, கொச்சி போன்ற இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் பாட்லிங் பிளான்ட்களுக்கு டேங்கர் லாரிகளில் கேஸ் எடுத்து செல்லப்படுகிறது.
இதற்காக எண்ணெய் நிறுவனங்களுடன், லாரி உரிமையாளர்கள் செய்து கொண்ட வாடகை ஒப்பந்தம் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து நடந்த புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், 3,500 டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கார்த்திக் கூறுகையில், கட்டுபடியான விலை நிர்ணயிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
7 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் 50 பாட்லிங் பிளாண்டுகளுக்கு கேஸ் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினமும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கார்த்தி தெரிவித்தார்.
மேலும், லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் வேலை நிறுத்தம் சில நாட்கள் நீடித்தால் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்றார் கார்த்திக்.