மதுரை சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக (டி.ஐ.ஜி.) அமரேஷ் பூஜாரியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பிரேம் ஆனந்த் சின்காவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில், திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக இருந்த அமரேஷ் பூஜாரி அங்கிருந்து மாற்றப்பட்டு, மதுரை சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுவரை அந்தப்பொறுப்பில் இருந்த எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எம்.மனோகர் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டு உள்ளார்.
எம்.மனோகர், சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றம் துணை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) பணியாற்றிய சுந்தரேசன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபிநவ் திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் இவரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை சரகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.