இளம்பிள்ளை வாதம் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் இன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் 1,126 மையங்கள் மூலம் 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் சென்னை மாநகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன.
புதுக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய அமைச்சர் ரகுபதி குழந்தைகளுக்கு சொட்டு கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மைதீன்கானும், திருவண்ணாமலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் பிச்சாண்டியும், நாகர்கோவிலில் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுரேஷ்ராஜனும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர்.
இதேபோல் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் போலியா சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்கள். தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலி சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் ஜென்ஷன் வயலட் என்ற அடையாள ''மை” வைக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2-வது கட்ட முகாம் பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது.
இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சொட்டு மருந்து கொடுப்போம்; போலியோவை ஒழிப்போம்; குழந்தை நலம் காப்போம்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.