Publish Date: Sat, 13 Dec 2008 (13:43 IST)
Updated Date: Sat, 13 Dec 2008 (13:35 IST)
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் நிவாரண உதவிகள் நிச்சயமாகக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, எவ்வளவு விரைவில் நிவாரண உதவிகளை வழங்குகின்ற பணியை நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு நிறைவு செய்திட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதி 7.12.2008 அன்று நடைபெற்ற மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தில், நிறைவுரை ஆற்றும் போது, "வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கும், வெள்ளம் நுழைந்த வீடுகளுக்கும், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்த வீடுகளுக்கும், வழங்க வேண்டிய நிவாரண உதவிகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் 15.12.2008க்குள் வழங்கி முடித்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்று அறிவித்திருந்தார்.
மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்குகின்ற பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு செய்து வருகிறார்கள்.
நிவாரண உதவிகளை வழங்குகின்ற பணி பெருமளவுக்கு முடிந்து விட்டதெனினும், நிவாரண உதவிகள் 15.12.2008க்கு மேல் கிடைக்காது என்ற எண்ணத்தில் பாதிக்கப்பட்டோர் கவலை கொண்டுள்ளதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே 15.12.2008க்குப் பின்னரும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் நிவாரண உதவிகள் நிச்சயமாகக் கிடைக்கும். எவ்வளவு விரைவில் நிவாரண உதவிகளை வழங்குகின்ற பணியை நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு நிறைவு செய்திட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.