Publish Date: Mon, 08 Dec 2008 (11:11 IST)
Updated Date: Mon, 08 Dec 2008 (11:10 IST)
தமிழகத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களை பார்வையிட மத்திய குழு நேற்று வந்தது. அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து, வெள்ளப்பகுதிகளுக்கு நாளை செல்கிறார்கள்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மத்திய அதிகாரிகள் குழு, சென்னைக்கு நேற்று வந்தது. இந்த குழுவுக்கு தலைவராக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் கே.ஸ்கந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சித் தலைவராக இருந்தவர். இவரைத் தவிர மேலும் 8 அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
வெள்ளசேதம் பற்றி தயார் செய்து வைக்கப்பட்டுள்ள அறிக்கை, அவர்களிடம் கொடுக்கப்படும். அவர்கள் வெள்ள பாதிப்புகளை பார்த்துவிட்டு அவர்கள் ஒரு அறிக்கையை தயார் செய்வார்கள். அவர்கள் அந்த அறிக்கையையும், தமிழக அரசின் அறிக்கைகளையும் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பார்கள்.
மத்திய குழு அதிகாரிகள், திங்கட்கிழமை (8ஆம் தேதி) காலை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அதன்பிறகு, எந்தவிதத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது என்று திட்டமிடுவார்கள். அவர்கள், தலா 4 பேர் வீதம் 2 குழுக்களாக பிரிந்து வெள்ள சேதத்தை 2 நாள்கள் பார்வையிடுகிறார்கள்.
வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டத்துக்கு ஒரு குழுவும், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு ஒரு குழுவும் செல்கிறது. இதில், எந்த குழுவுடன், குழுத் தலைவர் ஸ்கந்தன் செல்வார் என்பது கோட்டையில் இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவாகும்.
செவ்வாய்க்கிழமையன்று, வெள்ளப்பகுதிகளுக்கு புறப்படும் மத்திய குழுவினர், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு நாள் செல்கிறார்கள். ஒரு குழுவுடன், தமிழக வருவாய்துறை செயலாளர் தீனபந்துவும், மற்றொரு குழுவுடன் வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் சுந்தரதேவனும் செல்கிறார்கள். இக்குழுவினர் வரும் 9, 10 ஆகிய நாள்களில் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு, 11ஆம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.
அன்றைய தினமே தங்களது அறிக்கை, தமிழக அரசின் அறிக்கை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அவர்களது அறிக்கையை மத்திய அரசு பரிசீலித்து விட்டு, தமிழகத்துக்கு எவ்வளவு நிவாரணத் தொகை அளிப்பது என்று முடிவு செய்யப்படும்.