Publish Date: Fri, 21 Nov 2008 (17:58 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (17:57 IST)
இயக்குனர்கள் சீமான், அமீர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து கடந்த மாதம் 19ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரையுலகினர் ராமேஸ்வரத்தில் மிகப்பிரம்மாணடமான பேரணியும், இதையடுத்து கண்டன பொதுக்கூட்டமும் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைத்ததாகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறி அக்டோபர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் 31ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.எல். பாட்ஷா, இயக்குனர்கள் சீமான், அமீரின் பிணையை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை என்று கூறி, பிணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.