Publish Date: Sun, 02 Nov 2008 (05:28 IST)
Updated Date: Sun, 02 Nov 2008 (05:27 IST)
''ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், குறிப்பிட்ட கால அட்டவணைப்படி உறுதியாக நிறைவேற்றப்படும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்க சுத்தமான புளோரைடு கலப்பு இல்லாத காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டப்பணிகள் ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளன.
ஆனால், இந்த திட்டத்தை வைத்து நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் அரசியல் நடத்தும் சூழ்நிலை எழுந்துள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நிறைவேற்றப்பட்டு, இந்த மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.