Publish Date: Fri, 31 Oct 2008 (05:01 IST)
Updated Date: Fri, 31 Oct 2008 (05:01 IST)
நிபந்தனை பிணை வழங்கப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இன்று விடுதலை ஆகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடந்த 19ஆம் தேதி தமிழ்திரைஉலகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக சினிமா இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் விரைவு விசாரணை நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை பிணை அளித்தது.
இதைத்தொடர்ந்து சீமான், அமீரை பிணையில் எடுப்பதற்கான ஆவணங்களை ஒப்படைக்க இயக்குனர் மனோஜ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ராமேஸ்வரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்துக்கு நேற்று சென்றனர். அங்கு நீதிபதி விடுப்பில் இருப்பதாகவும் ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடைமுறை பணிகளை முடித்துக்கொண்டு அவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வந்தனர். நீதிபதி தங்கவேல் முன்னிலையில் இயக்குனர்கள் சீமான், அமீர் சார்பில் பிணையதாரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் இயக்குனர்கள் சீமான், அமீரின் கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. தலா ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் இரு நபர் பிணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி தங்கவேல், ராமநாதபுரம் விரைவு விசாரணை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி 2 பேரையும் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் மனோஜ்குமார், இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை நிபந்தனை பிணையில் விடுவிக்கும் உத்தரவு மதுரை மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்றும் சிறைத்துறை நடைமுறை முடிந்ததும் இன்று (31ஆம் தேதி) காலை பேரையும் சிறையில் இருந்து அழைத்துவர தமிழ் திரை உலகம் சார்பில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்.