Publish Date: Thu, 30 Oct 2008 (03:24 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (03:23 IST)
''
இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை தமிழக அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இயக்குனர்கள் இருவரையும் சந்தித்து விட்டு வெளியே வந்த சரத்குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் எனது நண்பர்கள் என்றும் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர் என்றார்.
மொழிப்பற்று, இன உணர்வு இருக்க வேண்டும் என்று கூறிய சரத்குமார், ஆனால் பேசும்போது உணர்ச்சி வசப்படக் கூடாது என்றும் உணர்ச்சிவசமான வார்த்தைகளை பேசக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு நபரையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறிய சரத்குமார், ஆனால் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சென்னையில் நவம்பர் 1ஆம் தேதி நடக்கும் நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கலாம் என்றும் இங்கு சேகரிக்கப்படும் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொடுப்பதைவிட, தனியாக ஒரு குழு சென்று விநியோகம் செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் கேட்டுக் கொண்டார்.