Publish Date: Tue, 28 Oct 2008 (15:36 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (15:35 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு நிவாரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதி தமது சொந்த நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு தமிழக மக்கள் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து முதல்வர் தமது சொந்த நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயை, இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக தலைமைச் செயலாளரிடம் வழங்கினார்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி 21 ஆயிரத்து 750 ரூபாயும், மு.க. ஸ்டாலின் 25 ஆயிரம் ரூபாயும், துரைமுருகன் 22 ஆயிரம் ரூபாயும் இலங்கைத் தமிழர்கள் நிவாரண நிதிக்காக வழங்கியதாக மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இவர்கள் தவிர மத்திய- மாநில அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் நிவாரண நிதிக்காக தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.
இன்றைய நிலவரப்படி இலங்கை தமிழர்கள் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ள மொத்த தொகை 26 லட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாயாகும் என்றும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.