Publish Date: Tue, 21 Oct 2008 (15:23 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (15:23 IST)
ஏற்கனவே நிலவும் மின்வெட்டின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட மின் விநியோக கட்டுப்பாட்டுமுறையால் அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மின் விநியோக கட்டுப்பாட்டுமுறை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்' அமைந்துள்ளது. தமிழகத்தின் தற்போதைய மின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக, மின் விநியோக கட்டுப்பாடுமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அதில் உள்ள கட்டுப்பாட்டுமுறைகள், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை பெருமளவு அதிகரித்துள்ளதே தவிர குறைத்துள்ளதாக தெரியவில்லை. 6 மணி நேரம் மின்சார வெட்டு என்று அறிவித்த போதே, நடைமுறையில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் அளவுக்கு மின்சாரவெட்டு இருந்தது. தற்போது 10 மணி நேரம் என்று அறிவித்ததன் மூலம், இனி மின்சாரமே வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே நிலவும் மின்சாரவெட்டின் காரணமாக வேலை இழப்பு, ஊதிய இழப்பு என தமிழக மக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் மின்வெட்டை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், 50 விழுக்காடு அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.
இது போன்ற அறிவிப்பினால், அனைத்துத் தொழில்களும் முடங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்துத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இந்தத் தரு ணத்தில், இது போன்ற அறிவிப்பு அனைத்து பிரிவினரையும் சொல்லொணா வேதனை அடைய வைத்துள்ளது.
இது போன்ற அறிவிப்பின் காரணமாக, இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் கூட தாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தமிழக அரசின் மின்சாரவெட்டு தொடர்பான அறிவிப்பையடுத்து, புதிதாக தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பத்திரிகைகளில் வெளி வரும் செய்திகளும் புகைப்படங்களும் எல்லாமே வெறும் கண்துடைப்பு நாடகம், அது காகித வடிவில் தான் இருக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.
எனவே, 20.10.2008 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின் விநியோக கட்டுப்பாட்டுமுறை அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.