இலவச கலர் டி.வி. கேட்டு மக்கள் மறியல்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
Publish Date: Tue, 21 Oct 2008 (10:52 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (10:51 IST)
ஈரோடு அருகே இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அருகே உள்ளது கோபிசெட்டிபாளையம். இதன் அருகே உள்ள காளியூர் காலனி. இது கே.என்., பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த காலனியில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி இதுவரை கிடைக்கவில்லை என்றும் உடடே தொலைக்காட்சி பெட்டி வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகொடிவேரி அணைக்கு செல்லும் டி.ஜி., புதூர் அருகே மேற்கொண்ட சாலை மறியல் காரணமாக மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே காலனியை சேர்ந்த மற்றொரு குழு மக்கள் முனியப்பன்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அடிப்படை வசதிகேட்டு அதே நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் தெரிந்ததும் கோபி தாசில்தார், சத்தியமங்கலம் தாசில்தார் உள்ளிட்டோர் வந்து சாலை மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால் சாலைமறியல் போரட்டம் கைவிடப்பட்டது.