Publish Date: Mon, 13 Oct 2008 (17:32 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (17:32 IST)
மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது.
மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்க தொடர்ந்துள்ளார்.
அதில், ''சென்னையில் உள்ள பாதாள சாக்கடையில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகி றார்கள். இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மது குடித்து விட்டு உள்ளே இறங்குகிறார்கள்.
ஏற்கனவே சாக்கடை குழாய்களில் மீத்தேன் வாயு அதிகமாக இருக்கும். எனவே துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை கைவிட வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், துப்புரவு தொழிலாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்க இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் வரும் 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை தரமணியில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.