Publish Date: Sun, 12 Oct 2008 (10:58 IST)
Updated Date: Sun, 12 Oct 2008 (10:57 IST)
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க வரும் 14ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைப்படுத்திடவும், நிலையான அமைதி அங்கே உருவாகிட தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், அங்கே இனப்படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ள, தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்று, வரும் அக்டோபர் 14ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருப்பதால், தாங்கள் இந்த அழைப்பை ஏற்று, தவறாது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.