Publish Date: Tue, 07 Oct 2008 (10:36 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (10:36 IST)
மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழக துறைமுகங்களுக்குள் கப்பல்களை நுழைய விடாமல் தடுப்போம் என்று தமிழக மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளது.
தமிழக அனைத்து மீனவர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலந்தாய்வு கூட்டம், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை கப்பல் படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தும் துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை கப்பல் படையினரால் சுடப்பட்டு இறக்கும் தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் உதவிப்பணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களின் வங்கி கடன்களை முழுவதுமாக மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளையும், மத்திய- மாநில அரசுகள் தீர்க்க வேண்டும் என்றும் மீனவர்களின் சார்பில், முதலமைச்சரை சந்திக்க தேதி கேட்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்குள் கப்பல்களை நுழைய விடாமல் தடுப்போம் என்றார்.
இதற்காக மீனவர்களின் விசைப்படகுகள், கட்டு மரங்கள் ஆகியவற்றை சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களுக்குள் கொண்டு செல்வோம். துறைமுகத்துக்குள் வரும் கப்பல்கள் முன் மீனவர்கள், படகுகளுடன் மறியலில் ஈடுபடுவதுடன் கப்பல்களை சுற்றி முற்றுகை போராட்டமும் நடத்துவோம் என்றார் அன்பழகனார்.