Publish Date: Thu, 02 Oct 2008 (13:50 IST)
Updated Date: Thu, 02 Oct 2008 (13:50 IST)
''
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உண்ணாவிரத போராட்டம் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை தமிழர்களின் பிரச்சனை என்பது, வெறும் தமிழர்களின் பிரச்சனை என்று மட்டுமே ஒதுக்கி வைத்து விட முடியாது. ஏறத்தாழ 4 ஆண்டுகாலம் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும் மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆலோசனை தெரிவித்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தங்கள் தயவோடு ஆட்சி புரிந்து வந்த மன்மோகன் சிங் அரசையோ, தமிழக அரசையோ நிர்ப்பந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த ஒரு தீவிர முயற்சியையும் கடந்த காலத்தில் எடுக்கவில்லை.
தற்போது போராட்டம் நடத்துவது, நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான தங்களது முஸ்தீபுக்கு ஈழத் தமிழர் பிரச்சினையை களமாக பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் வெகுகாலமாக நேரெதிர் நிலை கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஆதரவை திரட்டி போராட்டம் நடத்த முன் வந்திருப்பது கூட்டணி அமைப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.
எனவே, இலங்கையில் உடனடியாகவும், நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் ஏற்பட, ஒருமித்த குரலோடு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்துவதோடு, மத்திய அரசு செவி சாய்க்காமல் இருந்தால், ஒட்டுமொத்த தமிழக மக்கள் சக்தியும் அரசியல் வேறுபாடு தாண்டி ஒருங்கிணைந்து முடிவு கிடைக்கும் வரை போராட வேண்டும்.
இதை விடுத்து தனித்தனியாக நடத்தப்படும் போராட்டங்கள் வெறும் அரசியல் பரபரப்புகளையும், கூட்டணி பற்றிய ஹேஷ்யங்களையும் மட்டுமே ஏற்படுத்தி போராட்டங்களின் எண்ணிக்கைகளை உயர்த்துமே தவிர, நிரந்தர தீர்வு காண வழி வகுக்காது'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.