Publish Date: Thu, 02 Oct 2008 (16:07 IST)
Updated Date: Thu, 02 Oct 2008 (15:57 IST)
சிறிலங்க அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவி வழங்க கூடாது என வலியுறுத்தியும், ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். அகில இந்திய செயலர் ராஜா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஆர்.வரதராஜன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சி தலைவர் துரைஅரசன், உலக தமிழர் பேரவை தலைவர் ஜனார்த்தனம், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவூது, அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழக பொதுச் செயலாளர் இசக்கி முத்து, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், சினிமா இயக்குனர் சீமான், சுப.இளவரசன், கவிஞர்கள் முத்துலிங்கம், அறிவுநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை.