Publish Date: Sun, 21 Sep 2008 (17:16 IST)
Updated Date: Sun, 21 Sep 2008 (17:15 IST)
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நுழைந்து 50 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்று தாக்குதல் நடத்தியது. இதில் நடிகர் வடிவேலு எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
சுமார் 20 இரு சக்கர வாகனங்கள், 5 ஆட்டோவில் வந்து இறங்கிய அந்த கும்பல் நடிகர் வடிவேலு வீடு, அருகிலுள்ள அலுவகம் மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஜன்னல்கள், கதவுகள், விலை மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் இருந்த ஒருவர் காயமடைந்தார்.
இந்த தாக்குதலின் போது நடிகர் வடிவேலு வீட்டின் உள்ளே இருந்தார். எனினும் அவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். பின்னர் இந்த தாக்குதல் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரித்த காவல் துறையினர் தாக்குதலில் ஈடுப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளனர்.
சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டருகேதான் நடிகரும், தே.மு.தி.க. கட்சித் தலைவருமான விஜயகாந்த் வீடும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் அருகே காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த தாக்தல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.