Publish Date: Sat, 13 Sep 2008 (13:07 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (13:06 IST)
தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாயினர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி கோயிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி புதுக்குடி அருகே வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி விறகு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் ஓட்டுனர் கர்ணன், காஞ்சனா, திருமூர்த்தி ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காஞ்சனா, திருமூர்த்தி ஆகியோர் தாய், மகன் ஆவர்.
படுகாயம் அடைந்த 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.