Publish Date: Mon, 08 Sep 2008 (15:09 IST)
Updated Date: Mon, 08 Sep 2008 (15:09 IST)
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி.யில் சுரங்கப்பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இது பற்றி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பலியானார். அவரது குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர், நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்தத்தில் 10,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிலக்கரி சுரங்கத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவாக உள்ளது.
2,400 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தில் தற்போது 1,400 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அனல்மின் நிலைய வாயில் முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.