Publish Date: Thu, 21 Aug 2008 (10:26 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (10:25 IST)
'கனவு திட்டத்தில் இருந்து செயல்திட்ட இயக்ககத்திற்கு முன்னேறுதல்' என்ற பெயரில் சென்னை நகரை சுற்றி 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நிலத்தை வளைத்து போட திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை நகரம் எதிர்கொள்ள இருக்கும் சிக்கல்களை தீர்த்து வைக்கும் வகையில், அரசும், தனியாரும் இணைந்து முன்மாதிரி திட்டத்தை உருவாக்கி வருவதாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டல தலைவர் அறிவித்துள்ளார்.
'கனவு திட்டத்தில் இருந்து செயல்திட்ட இயக்ககத்திற்கு முன்னேறுதல்' என்ற பெயரில் சென்னை நகரை சுற்றி 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நிலத்தை வளைத்து போட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் நோக்கமே சென்னை நகரை குபேரர் நகரமாக மாற்றுவது. துணை நகரம் என்பது மாறி, மெகா நகரம், மெகா வணிக வளாகம் என அனைத்தும், மெகா வடிவில் உருவாக்குவதே இலக்காக உள்ளது.
இந்த திட்டத்தில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் எதுவும் இல்லை. சென்னை சுற்றுப்பகுதியில் உள்ள நிலங்களை அபகரித்து கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து தனியார் மூலம் திட்டம் நிறைவேற்ற ஏற்பாடு நடக்கிறது. இதனால், பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைவார்கள். ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். வீடு, நிலம் விற்பனை தொழிலில் 100 சதவீதம் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு ஆதரவு திரட்டி வரும் அமைப்பாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இவை நகர்புறத்தில் நிலத்தின் விலை உயர்வுக்கும், வேளாண் பாதிப்புக்கும் வழி ஏற்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சொந்த வீடு என்பது விலைமதிப்பற்ற பொருளாகி விட்டது. ஏழைகளை பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் கடந்த 5 ஆண்டாக தனது பணியை முடக்கியுள்ளது.
எப்போதோ கட்டி முடித்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வளைத்து போட்ட வீட்டுமனைகளை விற்பனை செய்யும் பணியை மட்டும் செய்து வருகிறது. இதை பற்றி தி.மு.க., அரசு சிந்திப்பதாக தெரியவில்லை.அடித்தட்டு மக்களுக்கு இடர்பாட்டை தரும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் செயல்திட்டத்தை தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு பின்பற்றுகிறது.
இந்த கூட்டமைப்பின் செயல் திட்டம், 4 முதல் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே பயன்படும். இதை அனைவரும் எதிர்க்க வேண்டும். பிற அரசியல் கட்சிகளை இணைத்து கொண்டு பா.ம.க. போராடும்" என்று கூறியுள்ளார்.