Publish Date: Tue, 29 Jul 2008 (10:36 IST)
Updated Date: Tue, 29 Jul 2008 (10:36 IST)
''தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா கடற்படையை கடுமையாக எச்சரிக்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பா.ம.க. நிறுவனர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் கடிதம் ஒன்றை அளித்தார் ராமதாஸ்.
அந்த கடிதத்தில், நெல்லுக்கு குறைந்த அளவு ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்றும் அரசு துறையும், தனியாரும் போட்டி போட்டுக் கொள்முதல் செய்யும் வகையில் உணவு தானிய கொள்முதல் முறையை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
18 மாநில மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்றும், மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கச்ச தீவை மீட்க வேண்டும் அல்லது அந்த பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை, வலைகள் காயப்போடும் உரிமை, தேவாலயத்தில் வழிபடும் உரிமை ஆகியவை மீட்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா கடற்படையை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.