Publish Date: Wed, 23 Jul 2008 (16:13 IST)
Updated Date: Wed, 23 Jul 2008 (16:12 IST)
காங்கிரஸ் அரசு பெற்றுள்ளது மோசடியான வெற்றி; வெட்கக்கேடான வெற்றி என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற ம.தி.மு.க கட்சி வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதிக்கான நன்கொடை சீட்டுகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசுகையில், ''மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மக்கள் நம்பிக்கை வாக்கில் தோற்று வெகுநாள்களாகிவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைச் சிதைத்து விடும். அரசை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஆனால், இன்று காங்கிரஸ் கட்சி தனக்கு பணம் கொடுத்ததாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவைத் தலைவர் மேஜையில் பணத்தை கொட்டுகிறார். பிரதமர் இப்படி நிலை தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி ரூ. 1,000 கோடி வரை செலவழித்துள்ளது. இதற்கு முன்பு எந்த அரசும் இப்படி ஈடுபட்டதில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் இப்போது காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், இனிமேல் மக்கள் அக்கட்சிக்கு மரண அடி கொடுப்பார்கள் என்று வைகோ கூறினார்.