Publish Date: Mon, 21 Jul 2008 (16:21 IST)
Updated Date: Mon, 21 Jul 2008 (16:15 IST)
''தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்துத் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' எனது தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.பிரபு, ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிய மனுவை அளித்தனர்.
அதில், ''சிறிலங்க கடற்படையினரின் மனிதாபிமானற்ற இக்கொடூரச் நிகழ்வு இந்தியக் கடல் எல்லைக்குள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதைக் கண்டித்து தமிழக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
எனவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களின் உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், கொழும்புவில் விரைவில் நடக்க இருக்கும் 'சார்க்' மாநாட்டின் போது சிறிலங்க அதிபர் ராஜபக்சேவிடம் இதுபற்றி பேசி, தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லைப் பகுதியில் சிறிலங்க கடல் படையினரால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் மீன் பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்துத் தருவதாகவும் உறுதியளித்தார்'' என்று தங்கபாலு கூறியுள்ளார்.