Publish Date: Tue, 01 Jul 2008 (19:56 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (19:55 IST)
விருதுநகரில், முறைகேட்டில் ஈடுபட்ட அரிசி ஆலைகளுக்கு உடந்தையாக இருந்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சில அரிசி ஆலைகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக விழிப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஐந்து அரிசி ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழங்கப்பட்ட நெல்லை, அரவை செய்து வழங்குவதற்குப் பதிலாக முறைகேடாகப் பெற்ற பொது விநியோகத் திட்ட அரிசியை ஒப்படைத்துள்ளது கண்டறியப்பட்டது.
இதைத் கண்காணிக்கத் தவறிய விருதுநகர் மண்டல மேலாளர் எஸ்.போஸ் மற்றும் துணை மேலாளர் (தரக் கட்டுப்பாடு) எஸ். முருகன் ஆகிய இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.