Publish Date: Tue, 01 Jul 2008 (14:23 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (14:23 IST)
சென்னை உட்பட தமிழகம் முழுதும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று நீங்கும் என்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 3000 டன் எண்ணெய் நேற்று இரவு குழாய் மூலம் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள 101 பாரத் பெட்ரோலிய சில்லறை விற்பனை நிலையங்களுக்கும், தமிழகம் முழுதும் உள்ள 787 பாரத் பெட்ரோலிய சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இன்று காலை முதல் சீராக பெட்ரோல் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சிக்கல் இன்று மாலைக்குள் சரியாகும் என்று பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு எண்ணெய் வழங்க கொச்சினிலிருந்து 14,000 டன் எண்ணெயுடன் கப்பல் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், இந்தக் கப்பல் வர தாமதமானதால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.