Publish Date: Sat, 21 Jun 2008 (12:12 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (12:11 IST)
தேர்தல் தகராறு தொடர்பான வழக்கில் அமைச்சர் பரிதி இளம்வழுதி உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஜான்பாண்டியன் நின்றார்.
ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குசாவடிக்குள் வைத்து பரிதி இளம்வழுதியும், அவரது ஆட்கள் 6 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, ஜான்பாண்டியனின் ஆதரவாளர் திருநாவுக்கரசு என்பவர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுதொடர்பாக சேத்துப்பட்டு காவல்துறையினர் கொலை மிரட்டல் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி உள்பட 7 பேர் மீது குற்றம்சாற்றப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும்போது அமைச்சர் பரிதி இளம்வழுதியும் கோர்ட்டில் ஆஜரானார்.
நீதிபதி காஞ்சனா வழங்கிய தீர்ப்பில், `அமைச்சர் பரிதி இளம்வழுதி உள்பட குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதாக' தெரிவித்தார். 'காவல்துறையினர் தரப்பில் குற்றச்சாற்றுகளை நிரூபிக்க தவறியதாலும், சந்தேகத்தின் பலனின் பேரில் அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும்' தீர்ப்பில் கூறினார்.