Publish Date: Fri, 13 Jun 2008 (20:54 IST)
Updated Date: Fri, 13 Jun 2008 (20:52 IST)
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தொழிற் சங்க பிரதிநிதிகள் இன்று நடத்திய பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காணும்படி முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து பிரதமர் இதில் தலையிட்டு, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
பேச்சுவார்த்தை நடத்த மத்திய நிலக்கரி துறை இணை அமைச்சர் சந்தோஷ் பக்ரோ டியா தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் இன்று டெல்லியில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர்கள், தி.மு.க. தொழிற் சங்கம், பா.ம.க. தொழிற் சங்கம், ஜீவா தொழிற்சங்கம் ஆகியவை கலந்து கொண்டன.