சென்னை மாநகர ஆணையராக கூடுதல் டி.ஜி.பி. சேகர் நியமனம்!
Publish Date: Wed, 21 May 2008 (10:09 IST)
Updated Date: Wed, 21 May 2008 (10:08 IST)
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் மே 31ஆம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி புதிய ஆணையராக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். புதியதாக உதயமாகி உள்ள சென்னை புறநகர் காவல்துறை ஆணையராக ஜாங்கிட் பொறுப்பேற்கிறார்.சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கும் நாஞ்சில் குமரன் மே 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆர். சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் குமரன் 31ஆம் தேதி ஓய்வு பெற்றவுடன் கூடுதல் டி.ஜி.பி. சேகர் சென்னை நகரின் காவல்துறை ஆணையராக பதவி ஏற்றுக்கொள்வார்.சென்னை காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு, சென்னை புறநகருக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படுவார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை புறநகர் காவல்துறை ஆணையரகம் உடனடியாக உதயமாகி உள்ளது. இதற்கான அரசாணையும் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது.
சென்னை புறநகர் காவல்துறை ஆணையராக ஐ.ஜி. எஸ்.ஆர்.ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஆர்.ஜாங்கிட் தற்போது சென்னை நகரின் கூடுதல் ஆணையராக உள்ளார்.