Publish Date: Tue, 22 Apr 2008 (12:57 IST)
Updated Date: Tue, 22 Apr 2008 (12:57 IST)
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் நோய் தாக்கி பெண் யானை ஒன்று இறந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்குட்பட்டது சத்தி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வசித்து வருகிறது. தற்போது இந்த வனப்பகுதியில் கடுமையான கோடை நிலவுவதால் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் தண்ணீருக்காக சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் வனத்துறையினர் ஆங்காங்கே குட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வருவதால் வனவிலங்குகளின் தாகம் ஓரளவு தீர்க்கப்படுகிறது. இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியின் அருகே உள்ள குரங்கு பள்ளத்தின் அருகில் சுமார் பத்து வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று நோய் தாக்கி இறந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம், வன சரகர் சிவமல்லு, வனவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு சென்று இறந்த யானையை பார்வையிட்டனர். பின் கோவை வனக்கோட்ட வனமருத்துவர் மனோகரன் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தார்.
பரிசோதனையில் குடலில் புண் ஏற்பட்டும், கொக்கி புழுக்கள் தாக்கியும் இந்த யானை இறந்தது தெரியவந்தது. பின்னர் நிகழ்விடத்திலேயே யானையை புதைக்கப்பட்டது.