Publish Date: Thu, 10 Apr 2008 (14:01 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (14:01 IST)
''ஒகனேக்கல் திட்ட செயல்பாட்டு கால அட்டவணைப்படி 2011ல் இத்திட்டம் முடிவடையும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை: ஒகனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற ஆளுநரிடம் மனு கொடுக்க சில (ஐ.ஏ.எஸ்.) முன்னாள் அதிகாரிகள் சென்றுள்ளார்களே; அந்த மனுவைப் பெற்றுக் கொண்டு; ஆளுநர், என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ஒருவேளை தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பதாக அந்த அறிவார்ந்த அதிகாரிகள் கனவு கண்டிருப்பார்களா?
இப்போது இந்த ஆட்சியில் என்ன தான் தவறு நடந்து விட்டது? ஒகனேக்கல் திட்டம் கைவிடப்பட்டு விட்டதா? இல்லை! அது சம்பந்தமான கிளர்ச்சிகளும், வன்முறை வெறியாட்டங்களும் - இப்போது தொடர்ந்து நடந்தால்; அது கர்நாடகா சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது மேலும் அராஜகங்கள் நடந்து இரு மாநில மக்களையும் பாதிக்கும் என்பதால் -அந்தத் தேர்தல் நடந்து முடியும் வரையில் கிளர்ச்சிகளுக்கோ, போராட்டங்களுக்கோ இடம் தராமல் அமைதி காப்போம் என்று வேண்டுகோள் விடுத்தது கோழைத்தனமா? அல்லது துரோகமா?
இதோ ஒகனேக்கல் திட்டத்தை; கட்டம் கட்டமாக எப்படி நிறைவேற்றுவது என்று ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் -அந்தப் பணிகளுக்கான அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் புரிந்து கொள்ளாமல் சில அவசரக்காரர்கள்; "மாலையிலே ஒப்பந்தம் -நள்ளிரவு திட்டம் தொடக்கம் -மறுநாள் காலையிலே திறப்பு விழா'' என்பது போல மந்திரத்திலே மாங்காய் விழச் செய்வோம் என்கிறார்களே; அவர்கள் "ஒகனேக்கல்'' திட்டம் நிறைவேறிடத் தேதி வாரியாக செய்து கொள்ளப்பட்ட அட்டவணையைப்படித்துப் பார்த்து, அதன் பிறகாவது விஷயத்தைப் புரிந்து கொள்வார்களாக!
ஒகனேக்கல் திட்டத்திற்கான பேச்சுவார்த்தையின்போது, ஒவ்வொரு பணிக்குமான காலக்கெடு குறிக்கப்பட்டு; 2012 டிசம்பர் மாதம் தான் திட்டம் முடிவடையும் என்றிருக்கும்போது; சில அவசரக்காரக் கட்சித் தலைவர்கள் அரசியலிலும் "ஸ்டண்ட்'' என்று ஆரம்பித்தால் அது நடக்கிற காரியமா? என்பதை ஆர அமர உட்கார்ந்து ஆலோசித்திட வேண்டாமா?
இரண்டு திராவிட கட்சிகளின் போட்டி அரசியலால் தமிழகம் தனது உரிமையை இழந்துள்ளது என்று தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் சொல்லி வருகிறாரே?
அதற்கு மாற்றாகத்தான் 2011இல் அவர் ஆட்சிக்கு வரப் போகிறாரே? அப்போதாவது தமிழகம் இழந்த உரிமையைப் பெறட்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.