Publish Date: Thu, 10 Apr 2008 (13:47 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (13:46 IST)
நாங்குநேரியில் ரூ.15,000 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று கையெழுத்தானது. இந்த திட்டத்தால் 70,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்திடவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அங்கு தொழில் முனைவோரை ஊக்குவித்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உதவியாக, பல்வேறு பொருள்களின் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றினை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் டிட்கோ உதவியுடன் கூட்டு முயற்சியில் நிறுவிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
டிட்கோ நிறுவனம் ஏ.எம்.ஆர். குரூப் மற்றும் கூட்டாளிகள் துணையுடன் (ஏ.எம்.ஆர்.எல். இண்டர் நேஷனல் டெக் சிட்டி லிமி டெட்) கூட்டு முயற்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றும். ஏறத்தாழ 2520 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்த பல்துறை உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பெருந்திட்ட அடிப்படையில், செய்முறைக்கான நிலப்பரப்பு 1500 ஏக்கர்.
செய்முறை அல்லாத நிலப்பரப்பு 1000 ஏக்கர். பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலமாக இருப்பதால் அனைத்து வகை தொழில்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை இச் சிறப்பு பொருளாதார மண்டலம் அளிக்கும்.
இச்சிறப்பு பொருளதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மற்றும் பொருள் போக்குவரத்து ஆகியவை தொடர்பான தொழில்களை தொடங்கிட தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களில் நிறைவேற்றப்படவுள்ள இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ரூ.15,000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கும். இத்திட்டம் முழுமையாக செயல்படத்தொடங்கும் போது ஏறத்தாழ 70 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். இது தமிழகத்தில் அமையும் பல்முறை பொருள்கள் சார்ந்த முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராமசுந்தரம், ஏ.எம்.ஆர். கன்ஸ்டிரக்ஷன்ஸ் சார்பில் ஏ.மகேஷ் ரெட்டி, ரவிகுமார் ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.