Publish Date: Tue, 08 Apr 2008 (12:19 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (12:18 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய விளை நிலங்களை தமிழக அரசு கையப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசை கண்டித்து வரும் 10ஆம் தேதி அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம், சோளிங்கர் தொகுதி, காவேரிப் பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அயிப்பேடு, கூடலூர், தாளிக்கால், நெடும்புலி, அகவலம், துறையூர், பெருவளையம், அருந்ததி பாளையம், வேலிந்தாங்கல், கண்டிகை, எடப்பாளையம், வசந்த நகர், எலிசபெத் நகர், எம்.பி.டி. நகர், கீழ்மோட்டூர் ஆதி திராவிடர் காலனி, அரியூர் ஆதிதிராவிடர் காலனி, தாளிக்கால் ஆதிதிராவிடர் காலனி, பனவட்டம்பாடி, வன்னிய மோட்டூர், கூடலூர் ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 2,124 விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 2,500 ஏக்கர் நன்செய் நிலத்தில் நெல், வாழை, தென்னை, கரும்பு ஆகியவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.
கிராமங்களில் வசிக்கும் அனைவரும் விவசாயத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருவதாகவும், இந்தச் சூழ்நிலையில் ராணிப்பேட்டை வருவாய்க் கோட்ட அலுவலர், அரக்கோணம் மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கிராமங்களில் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பு கோரி விண்ணப்பித்தாலோ அல்லது நிலங்களை கிரையம் பதிவு செய்ய விரும்பினாலோ, அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், ஏற்கெனவே அரக்கோணம் தாலுகாவில் தரிசு நிலங்களும், பயிர் செய்யாத காலி நிலங்கள் இருந்தும், ராணிப்பேட்டையை ஒட்டியுள்ள பராமரிப்புப் பண்ணைக்குச் சொந்தமான சுமார் 360 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தி, அவை பயன்படுத்தப்படாமல் இருந்தும், தற்போது மீண்டும் விவசாய விளை நிலங்களை ஆர்ஜிதப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி வாழ பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. அரசின் இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, வேலூர் மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்து, வேலூர் கிழக்கு மாவட்டக் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 10 மணி அளவில் அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 08 Apr 2008 (12:19 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (12:18 IST)