Publish Date: Tue, 08 Apr 2008 (10:13 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (10:12 IST)
ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் அணுகுமுறைக்கு உரிய பலன் கிடைக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றி முதல்வர் கருணாநிதி, மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு அறிக்கை விட்டுள்ளார். கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்கும் வரை பொறுமை காட்டுவதின் மூலம் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருள்சேதம், தேவையற்ற சமூக விரோதிகளின் சந்தர்ப்பச் சூறைகள், கொள்ளைகள் இவற்றைத் தவிர்க்கலாம்.
ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு சட்டம், ஒழுங்கு அமைதியைக் காத்தல், பொது அமைதிக்கு குந்தகம் வராமல் தடுப்பது, உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளித்தல் போன்ற தலையாய கடமை உண்டு என்பதை மறுக்க முடியுமா?
முதல்வர் கருணாநிதியின் இந்தச் சாதுர்யமான அணுகுமுறைக்கு நிச்சயம் உரிய பலன் கிட்டியே தீரும். தற்காலிகப் பழி ஏற்றாலும் சிறந்த வழியை அவர் இந்தியாவிற்கே காட்டியுள்ளார் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.