Publish Date: Sun, 06 Apr 2008 (11:30 IST)
Updated Date: Sun, 06 Apr 2008 (11:30 IST)
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று முதல் 8ஆம் தேதி வரை பார்வையிடுகின்றனர். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர்.
இது பற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பெய்த பெருமழையின் காரணமாக, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இவற்றின் சேத மதிப்பு குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு, பயிர் சேதம் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்பினை சீரமைப்பதற்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் நிதி கோரி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மழையால் ஏற்பட்ட சேதத்தினை மதிப்பிட மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையில், மத்திய செலவினத் துறை துணை இயக்குனர் தீனாநாத், வேளாண்மைத் துறை புகையிலை வளர்ச்சி இயக்கக இயக்குனர் டாக்டர் கே.மனோகரன், மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை கண்காணிப்புப் பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இன்று முதல் 8ஆம் தேதி வரை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். இந்த மத்திய குழுவினர் இன்று கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், 7ஆம் தேதி காலை தஞ்சாவூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
பின்பு திருச்சி சென்று, அந்த மாவட்ட ஆட்சித் தலைவருடன் சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் சக்திகாந்த தாஸ், மத்திய குழுவினருடன் உடன் செல்கிறார்.
பின்னர், மத்திய குழுவினர் திருச்சியில் இருந்து அரசு ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு செல்கின்றனர். 7ஆம் தேதி பிற்பகல் தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர். 8ஆம் தேதி அன்று திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு மதுரை சென்றடைகின்றனர்.
மதுரையில் மதுரை மாவட்ட ஆட்சியருடன் சேத விவரம் குறித்து ஆய்வு செய்கின்றனர். வருவாய்த் துறை செயலர் அம்புஜ் சர்மா மேற்கண்ட மாவட்டங்களுக்கு மத்திய குழுவினருடன் உடன் செல்கிறார். அன்று இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.
9ஆம் தேதி அன்று காலை தலைமை செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்கின்றனர். 9ஆம் தேதி மாலை விமானம் மூலம் புதுதில்லி திரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.