Publish Date: Thu, 03 Apr 2008 (16:06 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:49 IST)
''கன்னட அமைப்புகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கன்னட அமைப்புகளுக்கு எதிராக சில நிகழ்வுகள் நடந்து உள்ளது. உணர்வுகளை தெரிவிக்க கன்னட அமைப்புகளுக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் வன்முறையில் ஈடுபடுவது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் இப்படி போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பா.ம.க.வினர் எச்சரித்து அனுப்பப்பட்டு உள்ளனர்.
பள்ளி மாணவி சவுமியாவை அவருடைய தந்தைக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி கடத்தி உள்ளனர். பள்ளிகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவது இது 2-வது முறை. பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் குழந்தைகள் நல்லபடியாக சேர்ந்து விட்டார்களா என்று பள்ளிகள் கண்காணிக்க வேண்டும். இந்த விடயத்தில் பள்ளிகள் சரியாக செயல்படவில்லை.
வரும் காலத்தில் இது போல தவறு நடக்காமல் பள்ளி நிர்வாகம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகள் விடயத்தில் கவனமாக இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க முடியும் என்று நாஞ்சில் குமரன் கூறினார்.