Publish Date: Tue, 01 Apr 2008 (10:01 IST)
Updated Date: Tue, 01 Apr 2008 (10:01 IST)
''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமைச்சரை கூட்டத்தை கூட்டியதோடு நின்றுவிடாமல் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். யூக வணிகத்தை தடை செய்வது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அது இன்னும் சட்டமாக்கவில்லை. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் அதை சட்டமாக்க முடியும். எனவே அவசர நிலை கருதி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக யூக வணிகத்தை தடை செய்ய மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு யூக வணிகம் ஒரு காரணமாகும். எனவே அதை தடை செய்தாலே விலைவாசி குறைந்து விடும். மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தனி சட்டம் கொண்டு வரவேண்டும். திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமா சீன நாட்டு அரசுடன் தான் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து அந்த பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவது நல்லது அல்ல. திபெத் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது தான்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்!
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிறுபான்மை இன மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இலங்கையிலும் அது போன்ற பிரச்சினைகள் உள்ளன. அதை அந்த நாட்டு அரசுடன் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அந்த நாட்டை உடைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. எனவே இலங்கை பிரச்சினையில் தனி ஈழத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காரத் கூறியுள்ளார்.