Publish Date: Sat, 22 Mar 2008 (11:34 IST)
Updated Date: Sat, 22 Mar 2008 (11:34 IST)
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் இழந்துள்ள மகசூலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக குடிசை பகுதி மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடையை எதிர்நோக்கியிருந்த நெற்பயிர், உளுந்து, வேர்கடலை முதலிய பருப்பு வகைகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. வாழை, கரும்பு போன்றவையும் சேதமடைந்துள்ளன. முந்திரி, மாமரம் போன்ற மரங்களும் காய்க்க வேண்டிய இந்த பருவத்தில் கனமழையால் பூக்களை இழந்து நிற்கின்றன. ஏழை மக்கள் வேலைக்கு போக முடியாமலும், இருக்கின்ற குடிசைகளை இழந்தும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளும், விவசாயிகள் இழந்துள்ள மகசூலுக்கு இழப்பீடு தந்தும் மீண்டும் விவசாயம் செய்ய விதை, உரம் போன்ற உதவிகளை செய்தும் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.