Publish Date: Fri, 21 Mar 2008 (17:19 IST)
Updated Date: Fri, 21 Mar 2008 (17:19 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பயிர்களுக்கு விளைந்த சேதங்களை கணக்கிட்டு அறிக்கை அனுப்பவும், மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் பணியாற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க நிவாரணங்கள் முறையாக விரைவில் சென்றடைய ஆவன செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.