Publish Date: Fri, 14 Mar 2008 (10:20 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (10:19 IST)
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பால் விற்பனை விலையை உயர்த்தவில்லை என்று ஜெயலலிதா பொய் கூறுவதாக அமைச்சர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ''என் ஆட்சி காலத்தில் எருமைப்பால் கொள்முதல் விலை 6 பைசாவும், பசும்பால் கொள்முதல் விலை ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்ட போதும், நுகர்வோர் நலன் கருதி பாலின் விலை உயர்த்தப்படவில்லை'' என்று அப்பட்டமான பொய்யை கூறி இருக்கிறார்.
1991-96ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பசும்பால் கொள்முதல் விலை ரூ.2.26 அளவுக்கு உயர்த்திவிட்டு நுகர்வோருக்கு பாலின் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்த்தியவர் ஜெயலலிதா. 2001ஆம் ஆண்டு பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை விலையை 50 பைசா அளவுக்கு உயர்த்திவிட்டு, அவற்றின் விற்பனை விலையை ரூ.2 வரை உயர்த்தியவர் அவர். ஆனால் நுகர்வோருக்கு பால் விற்பனை விலையை உயர்த்தவே இல்லை என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்.
கொள்முதல் விலையை குறைவாகத் தந்துவிட்டு, விற்பனை விலையை அதிகமாக உயர்த்தியவர் ஜெயலலிதா. மேலும், 13 விழுக்காடு சத்துள்ள பாலை 12.5 விழுக்காடு என குறைத்து நடைமுறைப்படுத்த ஆணையிட்டதாகவும் ஜெயலலிதா மற்றொரு பொய்யை கூறி இருக்கிறார்.
ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் தரம் எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலையை அரசு வழங்கியுள்ளது. அதுபோல் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பாலின் தரத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அமைச்சர் மதிவாணன் கூறியுள்ளார்.