Publish Date: Mon, 10 Mar 2008 (16:21 IST)
Updated Date: Mon, 10 Mar 2008 (16:21 IST)
கழிவுநீர் அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்குதல், பராமரித்தல் தொடர்பான பயிற்சி புத்தகங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகரில் 2011ம் ஆண்டில் எதிர்ப்பார்க்கக்கூடிய கழிவுநீர் வரத்திற்கு ஏற்ப, முதற்கட்டமாக ரூ.720 கோடியில் சென்னை மாநகர நதிநீர் பாதுகாப்பு திட்டம் 2000ஆம் ஆண்டில் விரிவான வடிவமைப்பு மற்றும் கழிவுநீர் சேகரிப்பு கொண்டு செல்லுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றுதல் ஆகிய பணிகளை செயல்படுத்துவதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகம் ரூ.491.52 கோடியை மானியமாக வழங்கியது.
மதுரை, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கான கழிவு நீர் திட்டங்களுக்கும் நிதி வழங்கியது. தேசிய சுற்று சூழல் மற்றும் தேசிய நதிநீர் பாதுகாப்பு இயக்குநரகம், ஜப்பான் உலக கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து ''இந்திய கழிவு நீர் பணிகளில் திறன் மேம்படுதல்'' என்ற திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் கழிவுநீர் அமைப்புகளை இயக்குதல், பாராமரித்தல் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திறன்களை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட உள்ளது.
ஜப்பான் உலக கூட்டுறவு நிறுவனம் மற்றும் தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகம் தென் மாநிலங்களில் உள்ள இளநிலை, இடைநிலை பொறியியல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்த பயிற்சிக்கான இரண்டு புத்தகங்களை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் வாரியம் தயாரித்துள்ளது. இந்த பயிற்சிக்கான புத்தகங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த பயிற்சி புத்தகத்தை தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகத்திற்கான ஜப்பான் உலக கூட்டுறவு நிறுவனத்தின் நிபுணர் ஜீங்ஜீ வாக்கபயாஷீ பெற்றுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.